Sunday, May 11, 2008

சிவன் சொத்து குலநாசம் பக்தர்களுக்கு; சிவன் சொத்து கொள்ளை லாபம் தீட்சிதர்களுக்கு......... வே. மதிமாறன்

சிவன் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் ரவி வர்மா வரைந்த ஒவியங்கள்தான். சிவன் கோயில் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் சிவலிங்கம். சிவலிங்கம் என்பது உருவம் அல்ல, அது அருஉரூபம்.
அதாவது உருவமாகவும் இருப்பது, அதே நேரத்தில் உருவம் இல்லாமலும் இருப்பது. சரியாக சொன்னால், ‘குறி’யீடாக இருப்பது. இப்படித்தான் எல்லா கோயில்களிலும் லிங்கமாக காட்சி தருகிறார், சிவன். அதுதான் சிவலிங்கம்.

குனித்த புருவமும் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம்போல்
மேனியற் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த
பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே.

இந்தப் பாட்டு ‘தளபதி’ படத்துல நடிகை ஷோபனா வாயசச்சப் பாட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதை எழுதுனது, வயித்துவலி தாங்காமல், சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மதம் மாறுன சைவ சமயத்தின் ஆன்மீக ஒளி, அப்பர் அலய்ஸ் திருநாவுக்கரசர். (வயித்துவலிக்கெல்லாம் மதம் மாறுன ஆளுக்கிட்ட அப்படி என்னதான் ஆன்மீக ஒளியோ?)

தேவாரத்தில் அப்பர் அடிகள் இப்படி வர்ணித்தது போல்தான், சிதம்பரத்தில் முழுஉருவமாக, நடராஜ பெருமானாக காட்சி தருக்கிறார், சிவன்.
இந்த வித்தியாசம் சிவனின் உருவத்தில் மட்டுமல்ல, சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் முன்குடுமி மயிரில் இருக்கிறது. காவல் துறை அதிகாரியை அடிப்பதற்கு உயர்த்திய அந்தக் கரத்தில் இருந்தது. நந்தானரையும், ராமலிங்க அடிகளையும் கொளுத்திய அந்த நெருப்பில் இருந்தது. தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தீட்சிதர்கள் கொண்ட அந்த வெறுப்பில் இருக்கிறது.

‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பார்கள், சைவ அன்பர்கள்.

“உன் திருவாசகத்தை கொண்டுபோய் தெருவுல பாடு. கோயில் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி பாடுன வாயில குத்துவேன்’ என்றார்கள் தீட்சிதர்கள்.
“குத்துங்கடா அப்பவும் பாடுவேன்” என்றார் வீரமிக்க சிவனடியார் ஆறுமுகசாமி.
திருநாவுக்கரசர், ஞானசம்பந்தன், மாணிக்கவாசகர், சுந்தரர் - தேவாரம், திருவாசகத்தின் மூலவர்களான நால்வர்களுக்கும் இல்லாத ‘தில்’லு ஆறுமுகசாமி என்கிற இந்த சிவனடியாருக்கு இருந்தது.

(சிதம்பரம் சிற்றம்பல மேடையில் ஏற முயற்சித்த வள்ளலாரையும் அடித்து வீதியில் வீசியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். அதன்பிறகுதான் கோபத்தில் அவர் வடலுரில் ஒரு போட்டி சிற்றம்பல மேடையை உருவாக்கினார். அதிலும் ஊடுறுவி அதை சீர்குலைத்தார்கள் தீட்சிதர்கள்)

63 நாயன்மார்களில் நந்தனைத் தவிர மற்ற எல்லோருக்கும் பல்வேறு சோதனைகளுக்குப் பின், பார்ப்பன உருவத்தில் காட்சி தந்தான் சிவன். நந்தன் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை சிவனின் ஆலோசனையின் பேரில் ‘ஜோதி’யில் அய்க்கியமாக்கினார்கள் பார்ப்பனர்கள்.

அதுபோல், நமது சிவனடியார் ஆறுமுகசாமியை, பல்வேறு சோதனைக்களுக்கு உட்படுத்தியப் பிறகும் காட்சித் தர மறுத்த நடராஜனை இழுத்து வந்து, சிவனடியார் முன் நிறுத்தியிருக்கிறார்கள் தோழர்கள்.

நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னும் திட்சிதர்களிடம் இருக்கிறது. ஆனால் அதை 64 நாயன்மாரான ஆறுமுகசாமியின் மேல் கொளுத்திப்போடத்தான் தீட்சிதர்களால் முடியவில்லை.

காரணம், நந்தனின் காலம் தந்தை பெரியருக்கு முந்தைய காலம்.
பெரியவர் ஆறுமுகசாமியின் காலமோ தந்தை பெரியருக்கு பிந்தைய காலம்.
***

‘சிற்றம்பல மேடையில் ஏறி யாரும் பக்திப் பாடல்களை தமிழில் பாடலாம்’ என்ற தமிழக அரசின் உறுதியான உத்தரவை அடுத்து 4.3.2008அன்று சிவனடியார் ஆறுமுகசாமியை யானை மேல் அமரவைத்து, ஊர்வலமாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்து சென்றார்கள், மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்களும், நண்பர் ராஜு தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும்.

அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேவாரம் பாடச் சென்ற சிவனடியாரையும் மற்ற தோழர்களையும் பாடவிடாமல் தாக்கி, சட்டம் ஒழுங்கை சீர் குலைத்தார்கள் தீட்சிதர்கள். தீட்சிதர்களிடம் அடிவாங்கிய காவல் துறை, அவர்களை ஒன்றும் செய்யமுடியாத நிலையில், அரசின் உத்தரவை அமல்படுத்த தேவாரம் பாடச் சென்ற தோழர்களை வால்டர் தேவவரம் போல் பாய்ந்து தாக்கியது. சிவனடியார் உட்பட தோழர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

‘சிற்றம்பல மேடையில் ஏறி பாடச் செல்வோரை தாக்குகிற, தடுக்கிற தீட்சிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழக அரசு எச்சரித்தது.
சிவனடியார் சிறையில் இருக்க, அடுத்தநாள் மேடை ஏறி பாடுவதற்கு எந்த சிவபக்தர்களும் முன்வராததால், நாத்திகர்களான மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களே, சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகத்தை பாடினார்கள்.
இப்படியாக அந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் நடேந்தேறியது.

சிதம்பரம் கோயில் விவகாரத்தில், பல ஆண்டுகளாக பல அமைப்புகள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் அதற்காக 2000ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பொதுகூட்டங்கள், போராட்டம், ஆர்பாட்டம் என்றும் வழக்குமன்றத்திலும் போராடி அரசு இப்படி ஒரு உத்தரவு போடுவதற்கு காரணமாக இருந்த பெரியவர் ஆறுமுகசாமிக்கும், மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்கும், மக்கள் கலை இலக்கிய கழகத்திற்கும் நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை பிறப்பித்த தமிழக முதல்வருக்கும் நம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
இதுவே, ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் தீட்சிதர்களுக்கு எதிராக போராடியவர்கள், பொடாவில் உள்ள போய் இருக்க வேண்டியதுதான்.

எல்லா விஷயங்களிலும் சீறுகிற ஜெயலலிதா, சிதம்பரம் நடராஜன் விஷயத்தில காட்டிய மவுனம் அதைதான் உணர்த்தியது. (நமது போர்வாள் வைகோவோ, ‘சிதம்பரம் நடராஜனோ, சசிகலா நடராஜனோ எல்லோரும் ஒண்ணுதான்’ என்கிற அத்துவைத நிலையில இருந்துவிட்டர்.)

***

“தேவாரம், திருவாசகத்திற்கு அவமானம் ஏற்பட்டால் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன வந்ததது?” என்று கேட்கிறார்கள், இல. கணேசன்கள்.

அவமானம் தேவாரம், திருவாசகத்திற்கு அல்ல. தமிழக்கு. அதன் வழியாக தமிழர்களுக்கு.

ஒரு மொழியை தனியாக அவமானப்படுத்தமுடியாது. அந்த மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களை அவமானப்படுத்துவது அல்லது அந்த மக்களுக்கு என்ன ‘மரியாதை’ இருக்கிறதோ அதுவே அந்த மொழிக்கும் நேரும்.
அதுதான் தேவாரம், திருவாசகத்திற்கும் நேர்ந்தது.
ஆக நாத்திகர்கள் தேவாரம், திருவாசகத்திற்கு ஆதரவாக வரவில்லை. தமிழர்களுக்கு ஆதராவக வந்தார்கள்.

“சரி, நாத்திகர்களாக இருக்கிறவர்கள், கோயில் உள்ளே நுழைந்து சிற்றம்பல மேடையில் ஏறி பக்திபாடல்களை பாடறாங்களே, இது என்ன நியாயம்?” கேட்கிறார்கள், இராம. கோபாலன்கள்.

நீ போய் பாட வேண்டியதுதானே? நாத்திகர்கள் என்ன சிதம்பரம் கோயில் உள்ளே பெரியார் சிலையையா வைக்கச் சொன்னார்கள்? உன்னுடைய பக்தி பாடல்களைத்தானே பாடினார்கள்.
தமிழா? சமஸ்கிருதமான்னு நெருக்கடி வரும்போது, உன் பார்ப்பன யோக்கியதை எப்படி பல்ல காட்டுதுன்னு பாத்தீயா? (ஜெயேந்திரன் பல்லு மாதிரி)
உன் யோக்கியதை சரியல்லை. பக்தர்களுக்கு சுயமரியாதை இல்லை. அதனால்தான், அந்த கர்மம் புடிச்ச தேவாரம், திருவாசகத்தை நாத்திகர்கள் பாடி தொலைச்சாங்க.

மற்றபடி நாத்திகர்களின் ஜென்ம விரோதிகள் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள்தான். சைவ சமயத்தை பற்றி தந்தை பெரியார் தன்னுடைய இறுதி சொற்பொழிவில்,
“சைவக் கூட்டம் அயோக்கியப் பயல்கள் கூட்டம். அவர்கள், கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம் கழுவெற்றினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

காதலாகிக் கசிந்து கண்ணீர்
மல்கி ஓதுவார் தமை
நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்
பொருளாவது நாதன்
நாமம் நமச்சிவாய வே.

என்று ரொம்ப நல்லவன் மாதிரி தேவாரம் பாடியிருக்கானே பார்ப்பனப் பிஞ்சு ஞானசம்பந்தன், அவன் நாத்திகர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக பாடியிருக்கிறான் தெரியுமா?
இதோ தந்தை பெரியார் சொல்கிறார்:
“சம்பந்தர் என்கிற ஒரு பக்தன் - பக்தனாம் அந்த அயோக்கியப் பயல்! அவன் சொல்லி இருக்கிறான், ‘கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக் கிட்டே யெல்லாம் நான் படுக்கணும்’ என்று; கடவுளைக் கேட்கிறான்: ‘இசைத்துவை’ என்று” இப்படி பெரியார் காறிதுப்புகிற, இந்த ஞானசம்பந்தனைத்தான் சைவக் கூட்டம் ‘குழந்தை’ என்கிறது.

இப்படி பிஞ்சிலேயே பழுத்தவன், எழுதிய தேவாரத்தை நாத்திகர்கள் பாடுகிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம், பார்ப்பன மேல்ஜாதி திமிரை எதிர்க்க, அம்பலப்படுத்த கிடைத்த வாய்ப்பாக கருதிதான்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா வாழ்க்கையில் ஒரு சம்பவம். நடிகவேள் சிறையில் இருந்தபோது, ஒரு பார்ப்பனர் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு வந்திருக்கிறார். ‘பார்ப்பனர்களை அய்யர் என்று அழைக்கக்கூடாது’ என்கிற பெரியார் கருத்தில் ஊறிய நடிகவேள், அந்தக் கைதியை ‘அய்யிரே.. அய்யிரே..’ என்று உரக்கக் கூவி அடிக்கடி அழைக்கிறார்.


உடன் இருந்தவர் நடிகவேளிடம்,”நீங்கதான் அய்யர்ன்னு சொல்லமாட்டிங்களே, அப்புறம் எதுக்கு அவரை அய்யர் அய்யர்ன்னு கூப்படுறீங்க?” என்று கேட்டாரம்.

அதற்கு நடிகவேள், “அய்யர்ன்னா யோக்கியமானவன்னு ரொம்ப பயலுங்க நினைச்சிக்கிட்டு இருக்கான். திருட்டு வழக்கில வந்திருக்கிறவன் ஒரு அய்யர்ன்னு மத்த கைதிக்கெல்லாம் தெரியுட்டுமேன்னுதாய்யா அப்படி கூப்பிடுரேன்” என்றாராம்.

அதுபோல்தான் நாத்திகர்கள் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த தேவராம் பாடினார்கள். ‘தீட்சிதர்கள்’ என்கிற பார்ப்பன ஜாதிபெயரையும் அதன்பொருட்டே அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.

கோயில் நுழைவுப் போராட்டம், கருவறைப் நுழைவு போராட்டம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இப்படி பல நேரங்களில் பக்தர்களின் சுயமரியாதைக்காக நாத்திகர்கள்தான் போராட வேண்டியதா இருக்கு. எப்படி சாமி கும்பிடறதுன்னுகூட நாத்திகர்கள்தான் சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கு. என்ன பண்றது, அந்த லட்சணத்துல இருக்கு பக்தர்களோட பக்தி.

***
`அனைத்து ஜாதியினரும் ஆதினங்கள் ஆகலாம்`

பார்ப்பனர்கள் இதை எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தேவாரம், திருவாசகத்தை பாடுவதையே தன் தொழிலாக கொண்ட - திருநாவுக்கரசு, ஞானசம்பந்தனோட வாரிசு என்று சொல்லிக் கொள்கிற பார்ப்பனரல்லாத ஆதினங்கள் இதை குறித்து வாய் திறக்கவில்லையே?

ஆதினங்களின் மவுனத்திற்கு பின் இருக்கிறது பேரிரைச்சல் கொண்ட ஒரு அரசியல். சிவன் சொத்து குலநாசம் என்பது மக்கள் நம்பிக்கை. ஆனால் சிவன் சொத்து தன் சொத்து என்பது தீட்சிதர்கள், ஆதினங்களின் வாழ்க்கை.

ஆதினங்களாக வரவேண்டும் என்றால், சைவப் பிள்ளையாகவோ, அல்லது சைவ முதலியாராகவோ இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் நம் சிவனடியார் ஆறுமுகசாமியோ, மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

இன்று அவரை வைத்து சிற்றம்பல மேடையில் பாடச் சொல்வார்கள். பிறகு கருவரைக்குள் நுழைந்து தமிழ் பாட வைப்பார்கள். அதன்பிறகு “அண்ணாச்சி கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி ஒக்காருங்க. நம்ம ஆளு கொஞ்சம் அதுல ஒக்காரட்டும்” என்று ஆதினங்கள் பதிவிக்கும் பங்கு கேட்பார்கள், என்கிற முன்எச்சரிக்கை உணர்வுதான், ஆதினங்களின் மவுனத்திற்கு காரணம்.

‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்கிற சட்டத்தைக் கலைஞர் அரசு கொண்டு வந்தபோது ‘விஷ்வ இந்து பரிஷத்தோடு’ சேர்ந்து திருச்சியில் கண்டன மாநாடு நடத்தியவர்கள்தான் இந்த ஆதினங்கள். அதற்கும் இதுவேதான் நோக்கம். சங்கராச்சாரியார்களோடு, சைவ மட ஆதினங்கள் சந்திக்கிற புள்ளி இதுதான்.

தீட்சிதர்களின் திமிரை அடக்கவும், ஆதினங்களின் கள்ள மவுனத்தை குலைக்கவும் -சிதம்பரம் கோயிலை அரசுடமை ஆக்கவேண்டும். சைவ மடங்களின் சொத்தை அரசு கைப்பற்றி, ‘அனைத்து ஜாதியினரும் ஆதினங்கள் ஆகலாம்’ என்று சட்டம் இயற்ற வேண்டும். சிதம்பரம் கோயிலில் நந்தன் நுழைந்த பகுதி என்பதற்காக ‘தீண்டாமை’யின் அடையாளமாக இருக்கிற தெற்கு வாசல் சுவரை இடித்து அதை திறக்க வேண்டும்.

இதற்கெல்லாம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் போடுவோம்.

இந்த முறை ‘ஜோதி’யில் கலப்பது தீட்சிதர்களாக இருக்கட்டும்.


பேராசிரியர் சுபவீரபாண்டியன் அவர்கள் கேட்டுக் கொண்டுதற்காக, ‘கருஞ்சட்டை தமிழர்‘ இதழக்கு 2008 மார்ச் 24 அன்று எழுதப்பட்ட கட்டுரை. ஏப்ரல் மற்றும் மே மாத இதழ்கள் வெளிவராததால், கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

www.mathimaran.wordpress.com

Saturday, May 10, 2008

தில்லையம்பலத்தில் தேவாரம் - கி.வெங்கட்ராமன்

கொண்ட கொள்கையில் உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் ஒருவர் தமக்கு ஆதரவான துணை சக்திகளைத் திரட்டிக் கொள்ள முடியும் என்பதற்கு சிவனடியார் ஆறுமுகசாமி ஒரு எடுத்துக்காட்டு. சிதம்பரம் நடராசர் ஆலய சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாட கடந்த 9 ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி இன்று வெற்றிபெற்றுள்ளது. அவர் மட்டுமின்றி பிற பக்தர்களும் அங்கு தமிழில் பாடி வழிபட வாய்ப்பு திறந்து விடப்பட்டுள்ளது. இது வரலாற்றுச்
சிறப்புமிக்க நிகழ்வு.

சிதம்பரம் வட்டம் குமுடிமூலை கிராமத்தைச் சார்ந்த சிவனடியார் ஆறுமுகசாமி இந்தியாவெங்கும் சைவத் தலங்களுக்குச் சென்று தமிழில் வழிபட்டு வந்தார். சிதம்பரத்தில் அது நடக்கவில்லை என்ற ஆதங்கத்தில் 1999 ஆம் ஆண்டு
தனது முயற்சியைத் தொடங்கினார். 9-9-1999 அன்று இரவு பூசை நேரம் முடிந்த பிறகு அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படும் சிற்றம்பல மேடையில் நின்று
சிவபுராணம் பாட முயன்ற போது ஆறுமுகசாமியை அங்குள்ள தீட்சிதர்கள் அடித்து அவமானப் படுத்தி வெளியேற்றினர். இதன் மீது அவர் மேற்கொண்ட சட்ட முயற்சியினால் 28-10-1999 காலை 9.30 மணியளவில் கடலு}ர் சட்டப்
பணிகள் ஆணைய நிர்வாக அலுவலர், சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாக செயலர்
ஆகியோர் முன்னிலையில் சிற்றம்பல மேடையில் நின்று திருவாசகம் பாடி நடராசரை வழிபட்டார். அன்று இரவே சிதம்பரம் நகர காவல்நிலைய அதிகாரிகள் முன்னிலையில் நடந்த சமரசத்தில் ஆறுமுகசாமி தொடர்ந்து இதேபோல் பாடி
வழிபடலாம் என சிதம்பரம் தீட்சிதர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அந்த வாக்குறுதி மீண்டும் மீண்டும் மீறப்பட்டது. ஒவ்வொரு முறை ஆறுமுகசாமி
முயலும் போதும் அவரை அடித்துத் துன்புறுத்தி வெளி யேற்றுவது என்பதைத் தீட்சிதர்கள் தொடர் நடவடிக்கையாக மேற்கொண்டனர். இச்சிக்கல் தொடர்பாக ஆறுமுகசாமி தமது சொந்த முயற்சியில் சில தமிழ் அன்பர்களின் துணையோடு துண்டறிக்கைள் அச்சடித்து மக்களிடம் பரப்பி வந்தார். ஒரு கட்டத்தில் நம்மையும் அணுகினார். சிதம்பரம் தமிழ் காப்பணி இப்பிரச்சினை தொடர்பாக 7-12-1999-இல் துண்டறிக்கை வெளியிட்டு பரப்புரை செய்தது.தீட்சிதர்களின் தமிழ் விரோத சாதிவெறிப் பார்ப்பனியச்
செயல்பாட்டை அந்த அறிக்கை விளக்கமாக அம்பலப்படுத்திக் கண்டித்தது. ஒரு அமைப்பு என்ற வகையில் இப்பிரச்சினையை
மக்களிடையே தமிழ் காப்பணி முதன்முதலாக எடுத்துச் சென்றது.
ஆறுமுகசாமி தேவாரம் பாட அனுமதிக்கப்படாததை கண்டித்தும் தமிழில் அர்ச்சனை செய்யும் உரிமை எந்த தடையும் இன்றி தமிழக ஆலயங்களில் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ் காப்பணி சார்பில் அதன் தலைவர் (மறைந்த) முனைவர்
ச.மெய்யப்பனார் அவர்கள் தலைமையில் உண்ணாநிலைப்
போராட்;டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.

மெய்யப்பனாரும் தமிழ் காப்பணியின் வேறு சில நிர்வாகிகளும் இதற்கு முன்னமேயே சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் தேவாரம் பாடப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. 1987 ஆம் ஆண்டில் தமிழறிஞர் முனைவர்
வ.சுப.மாணிக்கனார் அவர்கள் தலைமையில் உலகறிந்த பல்வேறு
தமிழறிஞர்கள் ஒன்றிணைந்து சிதம்பரத்தில் உள்ள தமிழ்
உணர்வாளர்கள் துணையோடு இதற்கான முயற்சியை
மேற்கொண்டனர். சிற்றம்பல மேடையில் தேவாரம் ஒலிப்பதை
தீட்சிதர்கள் ஏற்க மறுத்தனர். வ.சுப.மாணிக்கனார் உண்ணா
நிலைப் போராட்டத்தை அறிவித்தார். அப்போது நடராசர்
ஆலயத்திற்கு குடமுழுக்கு விழா நடந்து கொண்டிருந்தது.
தொடர்ந்து தீட்சிதர்கள் அடாவடியாக தமிழை தடுத்துக்
கொண்டிருக்க, தமிழக அரசோ இது பற்றி பாராமுகமாக இருந்தது.
குடமுழுக்கை ஒட்டி ஆலயத்தில் எழுப்பப்பட்டிருந்த "வேள்வித்
தீயில் வீழ்ந்து மாய்வோம்" என்று வ.சுப.மா. இறுதி எச்சரிக்கை
விடுத்தார். அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் திரு. இராம.வீரப்பன் தலையீட்டில் சமரசம் நடந்தது. வேறு வழியின்றி
"காலப்பூசையின்" முடிவில் சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடப்படும் என்று தீட்சிதர்கள் ஒத்துக் கொண்டு கையொப்ப
மிட்டனர். ஆயினும் நம்முடையதமிழறிஞர்கள் கவனக்
குறைவாகவோ அல்லது அதற்கு மேல் போராட்டத்தை அடு;;த்த
கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலைமையின்
காரணமாகவோ யார் பாடுவது என்பது குறித்து வலியுறுத்தாமல்
விட்டுவிட்டார்கள். ஆயினும் இது மகத்தான முதல் கட்ட வெற்றி. இதற்குப் பிறகு தான் காலையில் பூசை முடிந்த பிறகு தீட்சிதர்களில்
ஒருவர் சிற்றம்பல மேடையில் 'நடராசர் திருமுன்' பக்தர்கள்
அனைவரின் காதில் விழும்படியாக தேவாரம் பாடுவது நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பிற ஆலயங்களில் கடவுள் சிலைநிறுவப்பட்டுள்ள கருவறைக்கு அடுத்து இருக்கும் அர்த்த மண்டபத்தில் பக்தர்கள்
அனுமதிக்கப்படும் இடத்தில் நின்று மனமுருகி தமிழில் பாடி வழிபாடு நடத்துவது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது. ஆனால் சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் மட்டும் இந்த உரிமையை தீட்சிதப் பார்ப்பனர்கள் தடுத்து வந்தனர்.

அர்த்த மண்டபத்திற்கு அடுத்துள்ள மகா மண்டபத்தில் தான் பக்தர்கள் நின்று தமிழில் பாடி வழிபாடு நடத்தலாம் என்று அடாவடி
செய்தனர். இது தொன்றுதொட்டு நிலவும் ஐதீகம் என்று காரணம்
கூறி தமிழுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு
எதிராகவும் தீண்டாமை கடைபிடித்தனர்.
இக்கொடுமைக்கு எதிராக ஆறுமுகசாமி செய்த முயற்சிக்கு
தமிழ் அன்பர்களும் சில தனிப்பட்ட வழக்குரைஞர்களும் துணை
புரிந்தார்கள். சிதம்பரத்திலும் கடலு}ர் மாவட்ட நீதிமன்றத்திலும்
வழக்குகள் நடந்தன. அவை யெல்லாம் உரிய வெற்றிபெறாத
நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற
வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் வழக்குரைஞர்
தோழர் ராஜுவிடம் ஆறுமுக சாமியை அறிமுகம் செய்து
வைத்து இவ்வழக்கை தொடர்ந்து நடத்த துணை செய்யுமாறு
இக்கட்டுரையாளர் கேட்டுக்கொண்டார்.

ராஜு அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் சகோதர அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவை இதனை தங்களது இயக்க
போராட்டமாகவே முனைப்போடு முன்னெடுத்தன. பாட்டாளி மக்கள்
கட்சி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட
கட்சிகளின் உறுதுணையோடு தொடர் போராட்டங்களை
ம.உ.பா.மை. நடத்தியது. ம.க.இ.க. வுடன் இணைந்து செயல்பட
முடியாத சூழலில் த.தே.பொ.க.வும் தமிழ் காப்பணியும் இச்சிக்கலில்
இணையான இயக்கங்களை நடத்தி வந்தது. தெருமுனைக் கூட்டங்கள் உள்ளிட்ட பரப்பல்கள் நடந்தன. இந்த வகையில் கடந்த
12-08-2006 அன்று தமிழ் காப்பணி நடத்திய எழுச்சி மிக்கக் கூட்டம்
குறிப்பிடத்தக்கது(விரிவிற்கு காண்க : தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2006).

ம.உ.பா.மை. துணையோடு ஆறுமுகசாமி அளித்த மனுவின்
மீது தமிழக இந்துசமய அறநிலையத்துறை மயிலாடுதுறை
இணை ஆணையர் 2004 திசம்பரில் அளித்த உத்தரவு
தீட்சிதர்களுக்கு ஆதரவாகஅமைந்தது. தொன்றுதொட்டு வந்த
வழக்கம் என்ற பெயரால் பக்தர்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடுவதை அந்த ஆணை தடை செய்தது. இதன் மீது ஆறுமுகசாமி
முன்வைத்த சீராய்வு மனு மீது அறநிலையத்துறை ஆணையர் 30-
4-2007-இல் அளித்த உத்தரவு தெளிவானது. சிறப்பானது.
தீட்சிதர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட எதிர்வாதங்கள் அனைத்தையும் தக்க முறையில் எதிர்கொண்டு அளிக்கப்பட்ட
ஆணையாகும் இது. தீட்சிதர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிற
"வகையறாக் கோயில்"- Dinominational temple என்ற வாதத்தை இவ்வாணை தெளிவாக
மறுத்தது. 1888-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம்
வழங்கிய ஒரு தீர்ப்பை இதற்கு ஆதாரமாக காட்டியது "ஏ.எஸ்.103
மற்றும் 159ஃ1888" என்ற வழக்கில் நீதிபதிகள் n~ப்பர்டு, முத்துசாமி
ஐயர் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற ஆயம்
அளித்தத் தீர்ப்பு "சிதம்பரம் நடராசர் கோயில் பன்னெடுங்
காலமாக ஒரு பொதுக் கோயிலாக இருந்து வருகிறது என்பதை
மறுக்க முடியாது. இக்கோயில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து
என்பதற்கு ஆதாரமே கிடையாது" எனக் கூறியது(தீர்ப்பு நாள் :
17.03.1890). அதுமட்டுமின்றி 23.01.1940-ஆம் நாள் சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெங்கட்ரமண ராவ், நிஜாம்
ஆகியோர் அடங்கிய ஆயமும் "இக்கோயில் தீட்சிதர்களின்
சொந்தக் கோயில் அல்ல என்பதிலும், அது அரசு சட்டத்தின்
கீழ் வருகிற ஒரு பொதுக் கோயில் என்பதிலும் எவ்வித ஐயமும்
இல்லை" என்று உறுதி செய்தது. ஆயினும் இவ்வாறான
தீர்ப்புகளுக்கும், தமிழக அரசின் ஆணைகளுக்கும் எதிராக உச்ச
நீதிமன்றம் சென்று தடை வாங்கியதை வைத்துக் கொண்டு
நடராசர் ஆலயத்தை தீட்சிதர்கள் தொடர்ந்து தங்களது நிர்வாகத்தின்
கீழ் வைத்திருக்கிறார்கள்.

சைவ சமயத்தில் தனிப்பிரிவு அல்லது வகையறா என்பதற்கு
இடமில்லை என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை(ஆதிவிசுவேசுவரர்
காசி விசுவநாதர் திருக்கோயில் எதிர் உ.பி. அரசு - 1997(4)SCC606) எடுத்துக்காட்டி தீட்சிதர்கள் வாதத்தை அறநிலையத்துறை ஆணை
மறுத்தது. அதுமட்டுமின்றி தொன்று தொட்டு நிலவும் பழக்கம்
என்பதற்கான வரையறையை இந்த அரசாணை எடுத்துக்காட்டியது.
ஒரு திருக்கோயிலில் கடை பிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள்
தொன்மையானவையாகவும் நினைவிற்கு எட்டாதவையாகவும்
இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வழக்கம் தொடங்கிய நாளில்
இருந்து தடையின்றி நடந்திருக்க வேண்டும். அதற்கான
திட்டவட்டமான சான்றுகள் இருக்க வேண்டும்.
சுந்தரர், நடராசர் கோயில் 'திருக்களிற்றுப் படிமருங்கு' நின்று
அதாவது பஞ்சாட்சரப் படியிலிருந்து தேவாரம் பாடினார்
என்பதைப் பெரிய புராணம் பதிவு செய்கிறது. சுந்தரர் தீட்சிதர்
அல்லாதவர். மேலும் கி.பி. 14, 15, 18 ஆகிய நு}ற்றாண்டுகளில்
படையெடுப்புகள் காரணமாகவும் சைவ வைணவ மோதல்
காரணமாகவும் நடராசர் ஆலய பூசைகள் அவ்வப்போது பல
ஆண்டுகள் தொடர்ச்சியாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. இதன் பிறகே
தீட்சிதர்களின் சூழ்ச்சியால் பக்தர்கள் சிற்றம்பல மேடையில்
தேவாரம் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை ஆணை 'இந்திய அரசமைப்புச் சட்டம்
வழங்கும் சம உரிமையை சாதி அல்லது வேறு காரணங்களை
காட்டி, பழக்கவழக்கங்கள் என்ற பெயரால் யாரும் மறுக்க
முடியாது' என்ற சட்டநிலையை எடுத்துக்காட்டி ஆறுமுகசாமியோ
அல்லது வேறு பக்தர்களோ சிற்றம்பல மேடையில் தமிழில்
பாடி வழிபடுவதை தீ;ட்சிதர்கள் தடுக்க முடியாது என
வலியுறுத்தியது.

ஆயினும் தீட்சிதர்கள் இந்த ஆணைக்கு சென்னை உயர்நீதி
மன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கினார்கள். அதன்பிறகு உயர்
நீதிமன்ற வழிகாட்டுதலுக்கிணங்க தமிழ்நாடு இந்துசமய
அறநிலையத்துறை செயலரிடம் முறையீடு செய்தார் ஆறுமுகசாமி.
29-02-2008 அன்று வழங்கிய ஆணையில் பக்தர்கள் காலப்
ப10சை முடிவில் அதன் ஒர் பகுதியாக கருதத்தக்க அளவிற்கு
அரை மணி நேரம் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட வழிபாட்டு
பாடல்களை தமிழில் பாடி வழிபடலாம் என்றும் அவ்வாறு
செல்பவர்கள் தீட்சிதர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்
என்றும் கூறியது. இதனடிப்படையில் ம.க.இ.க., விடுதலை சிறுத்தைகள் துணையோடு 02.03.2008 அன்று காலை தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் திமிரோடு வழிமறித்துத் தாக்கினர். காவலுக்கு சென்ற கடலு}ர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினரையும் தாக்கினர். கடும் போராட்டத்திற்கு
இடையில் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடைக்கு து}க்கிச் சென்று காவல்துறையினர் நிறுத்திய போதும் நடராசர் சிலையை பூணு}ல் அணிந்த மாமிச மலைகளாக குறுக்கே
நின்று மறித்தார்கள் தீட்சிதர்கள். நடராசர் திருமுன் தேவாரம்
பாடுவது என்ற அரசாணையை செயல்படுத்த விடாமல் தீட்சிதர்கள்
செய்த அராஜகம் உலகெங்கும் உள்ள தமிழர்களையும், சனநாயக
சக்திகளையும் விழித்தெழச் செய்தது. பார்ப்பனியத்தின்
கொடுங்கொன்மை விளங்காதவர் களுக்கும் விளங்க வைக்கப்பட்டது.
மாலையில் மீண்டும் தேவாரம் பாட முயன்றவர்கள் மீது
காவல்துறை தடியடி நடத்தி வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 34
பேரை கைது செய்தது. அடுத்த நாள் தீட்சிதர்கள் சிலரும் கைது
செய்யப்பட்டார்கள். ஆறுமுகசாமியும் கைதானார். தமிழில் வழிபாடு நடத்த வருபவர்களைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என 04- 03-08 அன்று தமிழக அரசு உறுதியாக அறிவித்தது. இதைத்
தொடர்ந்து 05-03-2008 அன்று காலை ம.க.இ.க. தோழர்கள் ஐந்து
பேர் காவல்துறை பாதுகாப்போடு சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடி அரசாணைப்படி உள்ள வழிபாட்டு உரிமையை நிலை
நாட்டினர். இதற்கிடையில் கைதான அனைவரும் 05-03-08 அன்று மாலை விடுதலையாயினர். 06-03-2008 அன்று சிற்றம்பல மேடையில் நின்று மனமுருகி தேவாரம் பாடி நீண்ட கால தன்னுடைய போராட்டத்தை வெற்றிகரமாக ஆறுமுகசாமி நிறைவு செய்தார்.
ஆயினும் பக்தர்கள் அனைவரும் சிற்றம்பல மேடையில் தமிழில் வழிபாடு நடத்தும் உரிமையை இடையீடு இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தும் தேவை எழுந்தது. அதற்கான முயற்சியை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கொண்டது. 11-03-2008 அன்று
சிதம்பரம் நகர காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இதற்கான சந்திப்பு நடந்தது. 12- 03-2008 தொடங்கி நாள்தோறும் காலையில் 'காலப் பூசை' முடிந்ததும் 7.30 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் தமிழில் பாடி நடராசரை வழிபடலாம் எனவும், அதற்கு தீட்சிதர்கள் எந்த வகையிலும் இடையூறு செய்யக் கூடாது எனவும் உடன்
படிக்கையானது. த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் மற்றும் பட்டு தீட்சிதர் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். இதன்படி 12-03-2008 முதல் 15-03-2008 வரை காவல்துறை பாதுகாப்போடு தமிழகமெங்கும் இருந்து சிவனடியார்கள் சிற்றம்பல மேடையில் கம்பீரமாக தெளிந்த இசையில் தேவாரம், திருவாசகம் பாடினர். 15-03-2008 அன்று தமிழ் வழிபாட்டுரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் நா.இரா.சென்னியப்பனார் எழுத்துப் பூர்வமாக தெரிவித்ததைத்
தொடர்ந்து தமிழகமெங்கும் இருந்து நாள்தோறும் காலையில்
சிவனடியார்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம்
பாடி வழிபட்டு வருகின்றனர். ஆயினும் சிதம்பரம் நடராசர்
ஆலயம் தொடர்ந்து தீட்சிதர்கள் நிர்வாகத்திலிருப்பது எந்த
வகையிலும் ஞாயமற்றது. தீட்சிதர்கள் தனித்த சமய வகைப்
பிரிவினர் என்பதற்கோ, இது அவர்களது வகையறாக் கோயில் என்பதற்கோ எந்த சட்ட ஆதாரமும் இல்லை. தவிரவும் வகையறாக்
கோயில்களின் நிர்வாகத்தையும் அரசே ஏற்று நடத்தலாம் என்று
உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்புரைத்திருக்கின்றது(காண்க :
தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2006).

அரசு நிர்வாகத்தின் கீழ் வராமல் பார்ப்பனர்கள் வசமே கோயில் ஒப்படைக்கப்பட்டால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன
நேரும் என்பதற்கு தில்லை தீட்சிதர்களின் அடாவடியே
எடுத்துக்காட்டு. அரசுக் கட்டுப்பாட்டில் வந்தால் பூசை,
சடங்குகள் நின்றுவிடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பூசை
சடங்குகள் நிறைவேற்றுவதற்கு பக்தர்களைக் கொண்ட நிர்வாகக்
குழுவை ஏற்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. நடராசர்
கோயில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும் கோவிந்தராச பெருமாள்
கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
அங்கு வழிபாட்டுச் சடங்குகள் எந்த இடைய10றும் இன்றி நடந்து தான் வருகின்றன. அதே போல் ஏற்பாடு நடராசர் ஆலயத்திலும் செய்து கொள்ள முடியும். கோயில் நகைகளைத்; திருடுவது, கோயில் வளாகத்திற் குள்ளேயே குடித்து விட்டு கும்மாளமிடுவது, பிற குற்றச்
செயல்கள் போன்றவற்றில் தீட்சிதர்கள் ஈடுபடுவது யாரும்
அறியாத ஒன்றல்ல. ஏதோ அரசு நிர்வாகத்தில் போனால் தான்
எல்லாம் கெட்டுவிடும் என்று ஐயுறுவதிலும் பொருளில்லை.
அரசு நிர்வாகத்தில் இருந்தால் பொதுமக்கள் தட்டிக்
கேட்டுத் தலையிட சட்ட வாய்ப்பு உண்டு. தீட்சிதர்களின் தனிக்
கோயில் என்றால் அந்த வாய்ப்பு இல்லை. எனவே இனியும்
தாமதிக்காமல் உரிய சட்ட ஏற்பாடுகள் செய்து சிதம்பரம் நடராசர் ஆலயத்தைத் தமிழக அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். தமிழ் உணர்வாளர்களின் போராட்டம் அதுவரை தொடர வேண்டும்.

சேர்த்தவர் : க.அருணபாரதி சேர்ப்பிக்கப்பட்ட நேரம் : Monday, April 28, 2008

Tuesday, May 6, 2008

சமற்கிருத வல்லாண்மை

தமிழிற் கலந்துள்ள பிறமொழிச்சொற்கள் தமிழர் தாமாக விரும்பிக் கடன் கொண்டவையல்ல. வளமிக்க தமிழ்மொழிக்குச் சொற்கடன் தேவையுமில்லை. மொழியறிஞர் எமினொ போன்ற பிறநாட்டு அறிஞர்கள் பலரும் தமிழின் வேர்ச்சொல் வளம் ஈடற்றதென்றுரைப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழில் வலிந்து பிறமொழிக் கலப்பைத் தொடர்ந்து வருகின்ற சில எழுத்தாளர்கள் நடைமுறையில் –வழக்கில் – உள்ள எளிய தமிழ்ச்சொற்களையும் புறக்கணித்து வீம்புக்காகவும் உள்நோக்கத்தோடும் அயல்மொழிச் சொற்களை கலந்தெழுதிக் குழப்பிவருகின்றனர்.


வடமொழி தேவமொழி என்றும் அம் மொழியையும் அதன் சொற்களையும் வழங்குவது இறைவனும் விரும்பும் ஏற்றம் என்றும் தவறான கருத்து வலிவாகப் பரப்பப் பட்டதால் வரைதுறையின்றி வடமொழிச் சொற்களை எவ்வகை எதிர்ப்புமின்றிக் கண்டமண்டலமாகத் தமிழில் கலந்தெழுதும் நிலையேற்பட்டது. இந்நிலையால், தமிழினுடைய தூய்மையும் வளமுங் கெடவும் பெரும்பேரளவிலான தமிழ்ச் சொற்கள் பொருளிழக்கவும் வழக்கொழியவும் நேர்ந்தது.


நன்றாக எளிதில் புரியக்கூடிய பொருத்தமான தமிழ்ச்சொற்களை விலக்கி, அரிதான, விளங்காத, சரியாகப் பொருந்தாத வடசொற்கள் வலிய திணித்துக் கலக்கப்பட்டதற்கான சில சான்றுகளைப் பாருங்கள் :

வலிந்து திணித்த / வழக்கு வீழ்த்தப்பட்ட
வடசொற்கள் / தமிழ்ச்சொற்கள்
தர்மம் /அறம்
கருணை /அருள்
நீதி /நயன்
தராசு /துலை
அங்கம் /உறுப்பு
யாகம் /வேள்வி
சந்தேகம் /ஐயம், ஐயுறவு
பயம்/ அச்சம்
தேகம் /யாக்கை, உடம்பு
சந்தோஷம், ஆனந்தம், குதூகலம் /மகிழ்ச்சி, உவகை, களிப்பு, இன்பம்
உத்தியோகம்/ அலுவல்
மைத்துனன், மச்சான்/ அளியன்
புதன்/ அறிவன்
சங்கீதம்/ இசை
ராகம்/ பண்
ஆச்சரியம /வியப்பு
அமாவாசை /` காருவா
பௌர்ணமி /வெள்ளுவா
விருத்தாசம்/ பழமலை, முதுகுன்றம்
பிருகதீசுவரர் /பெருவுடையார்
பாதாதிகேசபரியந்தம் /அடிமுதல்முடிவரை
பஞ்சேந்திரியம்/ஐம்புலன்
துவஜாரோகணம் /கொடியேற்றம்
ஹாஸ்யரசம் /நகைச்சுவை
குலஸ்திரீபுருஷபாலவிருத்த ஆயவ்ய்ய பரிமாண பத்திரிக்கை /குடிமதிப்பு அறிக்கை (census report)
ஜன்னல் /பலகணி, காலதர், சாளரம், காற்றுவாரி

இப்பட்டியலை முடிக்கத் தனிநூலே தேவை.
பொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகத் தோன்றுவதுபோல, வடசொற்களோடு கலந்த பல தமிழ்ச்சொற்களும் வடசொற்களாகக் கருதப்படுகின்றன.

வலிந்த மொழிக்கலப்பு செய்தபோதே, தமிழ்மொழியையும் தமிழ்ச் சொற்களையும் இழிவுறுத்தும் கொடுமையும் நடந்தது. தமிழை இழிவுபடுத்தினாலே போதும், தமிழர் இழிந்தவராகி விடுவர் என்ற உள்நோக்கத்துடன் இச்செயல்கள் நடந்தன. ‘சோறு’ என்பது தாழ்வென்றும், ‘சாதம்’ என்பது உயர்வென்றும், ‘நீர்’ என்பது இழிவென்றும் ‘ஜலம்’ என்பது உயர்வென்றும் மிகவலிந்த கருத்துத் திணிப்புப் பல்வேறு வகைகளில் நடைபெற்று வந்தது. இப்போக்கு இப்போதும்கூடச் சில இடங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

வடசொற் கலப்பால் தமிழரின் மொழியுணர்வு மரத்துப்போனதால் புதிது புதிதாய் ஆங்கிலம் உருது முதலான பிறமொழிச்சொற்கள் தடையின்றிக் கலந்து தமிழைச் சிதைக்கின்றன. தேவையின்றி வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே போவதால், தமிழ் பன்மொழிக் கலவையாக மாற நேர்கிறது. தமிழர் அடையாளமற்ற, வரலாறற்றக் குடியாக மாறும் பெருங்கேட்டிற்கு வழிசெய்கிறது.

நன்றி..... www.thamizhanambi.blogspot.com